அனைத்து மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் பாயும் நதிகளில் குறைந்தபட்சம் 15 முதல் 20 சதவீதம் வரை நீரோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு நதியில் பாயும் தண்ணீரின் அளவு, கால அளவு, அதன் தரம் ஆகியவற்றை வைத்து, அந்த நதியின் நிரோட்டம் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள நதிகளில் தடையின்றி தண்ணீர் பாய்வதை உறுதி செய்வதற்காக, குறைந்தபட்ச நீரோட்டத்தைப் பராமரிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, புஷ்ப் சைனி என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஸ்வதீந்தர் குமார், மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:
அனைத்து மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் பாயும் நதிகளில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிர்ணயித்துள்ள நீரோட்டத்தைப் பராமரிக்க
வேண்டும்.
அதன்படி, சராசரியாக, 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்தபட்ச நீரோட்டத்தைப் பராமரிக்க இயலாத மாநிலங்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முறையிடலாம்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துடன் இணைந்து சம்பந்தப்பட்ட மாநில அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கும்.
அதன் பிறகு, 15 சதவீதத்துக்கும் குறைவாக நதிகளில் நீரோட்டம் இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரை செய்தால், அதற்கேற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி ஸ்வதீந்தர் குமார் கூறினார்.