புது தில்லி: இந்திய சுதந்தர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றும் உரைக்காக, ஏராளமான மக்கள் தங்களது யோசனைகளை வாரி வழங்கியிருந்தனர்.
தனது சுதந்தர தின விழா உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து யோசனைகள் அளிக்கலாம் என்று பொதுமக்களிடம் மோடி கேட்டிருந்தார்.
இதையடுத்து சுமார் 12 ஆயிரம் பேர் தங்களது ஆலோசனைகள், யோசனைகளை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தனர்.
அதில், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மேம்படுத்தப்பட்ட பொருளாதாரம், ஊழலற்ற ஆட்சி போன்ற விஷயங்கள் அடங்கிய எண்ணற்ற யோசனைகள் இடம்பெற்றிருந்தது. தனித்திறமையை வளர்க்க இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிப்பது குறித்தும் யோசனை வழங்கப்பட்டிருந்தது.
ராஜேஷ் ஷர்மா என்பவர், தனியார் பள்ளிகளில் கருப்புப் பணம் அதிகமாக புழங்குவதாகவும், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
நிதிஷா அனேஜா என்பவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற சலுகைகளைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பல்லவி பாரதி என்பவர், உயர்கல்வி பாடத்திட்டங்கள் கடந்த 20 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளன. அவற்றை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
முன்னதாக, மக்களின் யோசனைகளைக் கேட்டிருந்த பிரதமர் மோடி, "ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு உரையாற்றுவேன். அது என் தனி ஒருவனின் குரலாக இருக்கக் கூடாது. உங்கள் 125 கோடி மக்களின் ஒருமித்த குரலாக இருக்க வேண்டும்" என்று வானொலியில் தனது மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.