தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதுதில்லி: தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர்கள் சார்பில் வழக்குரைஞர் நளினி சிதம்பரம் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏன் என்று உச்ச நீதிமன்றம் தமிழகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க எதன் அடிப்படையில் மத்திய அரசு இசைவு தெரிவித்தது என்று இன்று மதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மதியம் நீதிமன்றம் கூடியதும் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்கு பதிலாக கூடுதல் தலைமைவழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் நீதிமன்றத்தில், நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படும் என்று தெரிவித்தார். அதன்படி உடனடியாக சட்டமானது அமலுக்கு வருமென்று தெரிகிறது.

அதேபோல தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் வழக்கறிஞர் இருவரும் அவசர சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று வாதிட்டனர்  சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்பதாலேயேதான் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு அனுமதி தரப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞரும் தெரிவித்தார்.

அவர்களது வாதங்களைக் கேட்ட பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் விபரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் வாரியாக தகவல்களைத் தர வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் எளிதாக உணர்ந்து கொள்ளும் வகையில் சார்ட் வடிவில் இருக்க வேண்டும்.

தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டமானது எந்த வகையிலும் மாணவர்களின் நலனுக்கு விரோதமாக அமைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com