சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைபட்டிருக்கும் அவர்களை விடுவிப்பதா? வேண்டாமா? என்பது குறித்த முடிவு அந்த விசாரணைக்குப் பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜீவ் கொலையாளிகளான சின்ன சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன், முருகன், நளினி, ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரது விடுதலை தொடர்பான முடிவை மத்திய, மாநில அரசுகள் இன்னமும் எடுக்கவில்லை. இந்நிலையில், அதுகுறித்த உத்தரவை பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் முறையிட்டனர். அந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அதனை பரிசீலித்த நீதிபதிகள்,
வியாழக்கிழமை இதுதொடர்பாக விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.