குஜராத்தில் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய இரண்டு மூத்த உயரதிகாரிகள் வியாழக்கிழமை ராஜிநாமா செய்தனர்.
குஜராத்தில் இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் என்.கே. அமீன் மற்றும் தருண் பரோத். காவல் கண்காணிப்பாளர்களாக பணிபுரிந்த இந்த இருவரும், மேற்குறிப்பிட்ட வழக்கில் கடந்த 2007-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கிலிருந்து அமீனை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு விடுவித்தது. இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த அவரை குஜராத் அரசு மீண்டும் காந்திநகர் மாவட்ட எஸ்.பியாக நியமித்தது. பின்னர், அவர் 2016-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அதன் பிறகும் அமீனுக்கு பணி நீட்டிப்பு வழங்கிய குஜராத் அரசு, அவரை அதே பகுதியில் எஸ்.பி.யாக நியமனம் செய்தது.
அதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த தருண் பரோத்தும் மேற்கு ரயில்வே எஸ்.பி.யாக பணி நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவர்களின் மறு பணிநியமனங்களை எதிர்த்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா, குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரது மனுவை அண்மையில் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சர்மா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமீன் மற்றும் தருண் பரோத் சார்பில் நீதிமன்றத்தில் ஒரு கடிதம் அளிக்கப்பட்டது. அதில், தாங்கள் பணியிலிருந்து ராஜிநாமா பெறப்போவதாகக் கூறப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் குஜராத் காவல்துறை இயக்குநரிடம் வியாழக்கிழமை மாலை தங்கள் ராஜிநாமா கடிதங்களை வழங்கினர்.