நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபரும், காங்கிரஸ் மூத்த தலைருவமான நவீன் ஜிண்டால் உள்ளிட்டோருக்கு சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அமர்கோண்டா நிலக்கரிச் சுரங்கத்தை நவீன் ஜிண்டாலுக்குச் சொந்தமான எஃகு நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதன்பேரில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இதில், இந்த முறைகேட்டில் நவீன் ஜிண்டால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் அமைச்சர் தாசரி நாராயண் ராவ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த வழக்கு தெடார்பாக நவீன் ஜிண்டால், ஜிண்டால் எஃகு நிறுவன ஆலோசகர் ஆனந்த் கோயல், கிரீன் இன்ஃப்ரா நிறுவன துணைத் தலைவர் சித்தார்த் மத்ரா, நிஸார் ஸ்டாக்ஸ் நிறுவன இயக்குநர் சூரிய நாராயன், கே.இ. நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ராஜீவ் அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு, சிபிஐ நீதிமன்ற நீதிபதி பரத் பராஸர் தலைமையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.