ராஜீவ் கொலை: சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உள்ளிட்டவை குறித்து மேற்கொள்ளப்பட்ட மறுவிசாரணையின் முடிவு என்ன? என மத்திய
ராஜீவ் கொலை: சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உள்ளிட்டவை குறித்து மேற்கொள்ளப்பட்ட மறுவிசாரணையின் முடிவு என்ன? என மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளில் ஒருவரான ஏ.ஜி. பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சதியை சிபிஐ விசாரிக்கவில்லை. இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு அதன் விசாரணையை முடிக்காமல் தாமதமாகச் செயல்படுகிறது என முறையிடப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், 'ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தின் பின்னணி, சதி தொடர்பாக பல்நோக்கு விசாரணை குழு நடத்தி வரும் விசாரணை எந்த நிலையில் உள்ளது? எப்போது அதன் விசாரணை முடிவடையும்? யாராவது ஒரு நபரை நியமித்து இந்த விசாரணை கண்காணிக்கப்பட வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் கூட்டுச் சதி செய்ததாக பேரறிவாளன் தண்டிக்கப்பட்டுள்ளார். எனவே, சதிச் செயலின் நோக்கம் தொடர்பான விசாரணையை சிபிஐ தலைமையில் செயல்படும் பல்நோக்கு கண்காணிப்புக் குழு விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்' என வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள், 'நாட்டின் மிக உயரிய விசாரணை அமைப்பாக சிபிஐ உள்ளது. ராஜீவ் கொலைச் சம்பவத்தின் பின்னணி, சதித் செயல் பற்றிய விசாரணையை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சிபிஐ விசாரிக்கப் போகிறது?
அந்த விசாரணை எப்போது முடியும்? இந்த விவகாரத்தில் இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை விவரத்தை நான்கு வாரங்களுக்குள் அறிக்கையாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
விசாரணை: இந்நிலையில் இது தொடர்பான மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோர் அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது பேரறிவாளன் சார்பில் வழக்குரைஞர்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, 'ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஐஇடி வெடிகுண்டு தயாரிப்பின் பின்னணி உள்ளிட்ட சதி குறித்து விசாரிக்கப்படவில்லை' என்றனர்.
சிபிஐ தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.கே. தே ஆஜராகி, இது தொடர்பான மனு விவரம் கிடைக்கப் பெறவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், 'ராஜீவ் கொலை வழக்கில் மறுவிசாரணை அல்லது விரிவான விசாரணையின் முடிவு என்ன? இது குறித்து கூறுங்கள்' என சிபிஐ வழக்குரைஞரை நோக்கி கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com