உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சனிக்கிழமையன்று (ஆக. 19) கோரக்பூருக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாள்களில் 60 குழந்தைகள் உள்பட 71 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்ததாகக் கூறப்படும் நிலையில், அதனை மாநில அரசு மறுத்துள்ளது.
இந்நிலையில், கோரக்பூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சத்யேந்திர சின்ஹா கூறியதாவது:
கோரக்பூரின் அந்தியாரி பாக் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில், 'தூய்மை உத்தரப் பிரதேசம்' பிரசாரத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைக்கிறார். பின்னர், மூளை அழற்சி நோய் பாதிப்பு அதிகமுள்ள இடங்களையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிடவுள்ளார் என்றார் சத்யேந்திர சின்ஹா.
ராகுல் பயணம்: இதேபோல, குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் சனிக்கிழமை அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த பயணத்தின்போது, கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோருக்கு ராகுல் ஆறுதல் கூறுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.