ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததை வரவேற்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடிவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததை வரவேற்கிறோம்.
அந்த அமைப்பின் தலைவர் சையது சலாஹுதீனையும் சர்வதேச பயங்கரவாதியாக அந்நாடு 2 மாதங்களுக்கு முன் அறிவித்தது.
இருநாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்களில் இணைந்து செயல்படும் என்பதை அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது. அந்த அமைப்புக்கு ஆதரவு அளித்து வருபவர்கள் அதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரவீஷ் குமார் தெரிவித்தார்.
முன்னதாக, 'காஷ்மீரிகளின் குரலாக செயல்பட்டுவரும் அந்த அமைப்புக்கு அமெரிக்க தடை விதித்தது நியாயமற்றது' என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை குற்றம்சாட்டியது. கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு காஷ்மீரில் இயங்கி வருகிறது.