தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கப் போவதாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) முடிவு செய்திருப்பதை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரவேற்றுள்ளார். இந்த முடிவு பிகார் வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை உருவாக்கப் போகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய ஜேடியு தலைவர் நிதீஷ் குமார், பாஜகவின் ஆதரவுடன் பிகாரில் ஆட்சியமைத்தார். அதற்கு பிரதிபலனாக பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடமளித்தார்.
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு நிதீஷைச் சந்தித்த அமித் ஷா, தங்களது கூட்டணியில் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், பிகார் தலைநகர் பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஜேடியு கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிதீஷ் குமாரின் இந்த முடிவு ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும்கூட, முறைப்படி அதனை செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த முடிவு குறித்து அமித் ஷா, தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியினர் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்று. இதனை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மட்டும் வலு சேர்க்கும் விஷயமாகக் கருத முடியாது. பிகாரை வலுப்படுத்தும் சிறந்த முடிவாகவே பார்க்க வேண்டும். இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் மலரத் தொடங்கியுள்ளது என்றார் அவர்.