சிறுபான்மை சமூக மாணவர்களுக்காக, 100 நவோதயா பள்ளிகள், 5 உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள், பெüத்தர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி, ஜெயின் ஆகிய சமூகங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.
இதுதொடர்பாக, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: சிறுபான்மையினர் சமூகத்தினர் சுயமேம்பாடு அடைய வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. எனவே, அவர்களுக்கு கல்வி அளிப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது. அதற்காக, நாடு முழுவதும் சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் 100 நவோதயா பள்ளிகளையும், 5 உயர் கல்வி நிறுவனங்களையும் தொடங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அந்தக் கல்வி நிறுவனங்களில், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்கள், அடுத்த ஆண்டு முதல் செயல்பட வாய்ப்புள்ளது. உயர் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்று அவர் கூறினார்.
அண்மையில், மெüலானா ஆஸாத் கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பின் உயர் நிலைக் குழு அளித்த அறிக்கையின்படி, இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சிறுபான்மையின மக்களின் கல்வி முன்னேற்றத்துக்காக, 211 நவோதயா பள்ளிகள், 25 சமுதாயக் கல்லூரிகள், 5 உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று அந்த உயர் நிலைக் குழு பரிந்துரை செய்திருந்தது. மேலும், அந்தக் கல்வி நிறுவனங்கள், முழு உள்கட்டமைப்பு வசதிகளுடன் இருக்க வேண்டும் என்றும் அந்தக் குழு தெரிவித்திருந்தது.
நவோதயா பள்ளி முறையில், கிராமப்புறங்களில் இருந்து தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குத் தரமான கல்வி அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகள் நாட்டிலேயே சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.