புதுதில்லி: பாஜக ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டியுள்ளார். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்த பிறகு பாஜக முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துவது இது 3-வது முறையாகும்.
தில்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந் கூட்டத்தில் பாஜக ஆளும் 13 மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசின் முக்கிய திட்டங்களை மாநிலங்களில் செயல்படுத்துவது குறித்தும், மாநிலங்களின் சமூக வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் முதல்வர்கள் தங்களது மாநிலங்களில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவார்கள் எனவும் கூறப்படுகிறது.
2019 மக்களவை தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. வரும்காலத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து பிரதமர் மோடியும், கட்சித் தலைவர் அமித்ஷாவும் ஆலோசனை வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
பிகாரில் ஐக்கிய ஜனதாளம் உடன் பாஜக கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தோல்வி பயம் காரணமாகவே பாஜக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.