தலாக் விவாகரத்து நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, இந்த நடைமுறையால் பாதிக்கப்பட்ட ஜீனத் அலி சித்திக்கி என்ற முஸ்லிம் பெண் வரவேற்றுள்ளார்.
அவரை எந்தக் காரணமும் இல்லாமலேயே தலாக் நடைமுறை மூலம் கணவர் கடந்த 2015-இல் விவாகரத்து செய்திருந்தார். அதனால் தன் இரண்டு குழந்தைகளையும் தன்னந்தனியாகப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஜீனத் அலிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தலாக் நடைமுறை காரணமாக ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்கள் வீட்டில் அழுது கொண்டிருக்கின்றனர். இவ்வாறு விவாகரத்து செய்யப்படும் பெண்கள், மற்றவர்களால் தீய நோக்கத்துடன் கவனிக்கப்படுகின்றனர். அது எவ்வாறு இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். ஏனெனில் எனக்கு அது நேரிட்டுள்ளது.
சரியாக சமையல் செய்யவில்லை போன்ற அற்பமான காரணங்களுக்காக, பெண்களை ஆண்கள் தூக்கியெறியும் (விவாகரத்து செய்யும்) நடைமுறைக்கு நரேந்திர மோடி முடிவு கட்டியுள்ளார். தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இது வரவேற்கத்தக்கது என்று ஜீனத் அலி தெரிவித்தார்.
அவரைப் போலவே, நாடு முழுவதும் பெண்களும், மகளிர் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.