ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, ஏர்-இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வனி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்த, ஏ.கே.மிட்டல் தொடர் ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து, அந்தப் பதவிக்கு அஸ்வனி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இதற்கு முன்பு, தில்லியில் ரயில்வே கோட்ட மேலாளராகவும், இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், ரயில் அருங்காட்சியகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
ரயில்வே வாரியத் தலைவராக இருந்த ஏ.கே.மிட்டலின் பதவிக் காலம், கடந்த 2016-ஆம் ஆண்டுடன் நிறைவடைய இருந்த நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், தொடர் ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று, ஏ.கே.மிட்டல் தனது ராஜிநாமா கடிதத்தை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் செவ்வாய்க்கிழமை மாலை கொடுத்தார். அவரது ராஜிநாமாவை, அமைச்சர் புதன்கிழமை ஏற்றுக் கொண்டார்.
ஏ.கே.மிட்டல், இதற்கு முன்பு தெற்கு ரயில்வே, மத்திய ரயில்வே, தெற்கு மத்திய ரயில்வே மண்டலங்களில் பொதுமேலாளராகப் பணியாற்றியவர். உத்கல் விரைவு ரயில் விபத்துக்குப் பிறகு, ரயில்வே வாரிய உறுப்பினர் ஒருவர் உள்பட 3 மூத்த ரயில்வே அதிகாரிகளை அமைச்சர் சுரேஷ் பிரபு, விடுப்பில் அனுப்பினார். இதனால், அதிருப்தி அடைந்த ஏ.கே.மிட்டல் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.