பாட்னா: பிகாரில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தனி விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடியை அறிவித்தார்.
பிகார் வெள்ள பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டம் சென்றடைந்தார். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் பிகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் ஆகியோருடன் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
அப்போது, வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் பிரதமர் மோடி நேரடியாகக் கேட்டறிந்தார். பிகார் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று மோடி உறுதி அளித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மோடி, பிகாருக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.500 கோடி ஒதுக்குவதாகவும், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்தியக் குழு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.