புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா (64) இன்று திங்கள்கிழமை பதவியேற்கிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகித்து வரும் ஜே.எஸ். கேஹரின் பதவிக்காலம் நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆக.27) நிறைவடைந்தது.
இதையடுத்து, சட்ட விதிகளின்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரையை அளிக்கும்படி, கேஹரிடம் மத்திய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தனக்குப் பிறகு மிகவும் மூத்த நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவின் பெயரை சட்ட அமைச்சகத்திடம் கேஹர் பரிந்துரைத்தார்.
64 வயதான நீதிபதி மிஸ்ரா, அரசியலமைப்பு, சிவில், குற்றவியல், வருவாய், சேவை மற்றும் விற்பனை வரி விவகாரங்களில் ஒடிஸா உயர் நீதிமன்றத்திலும் சேவை தீர்ப்பாயத்திலும் திறம்பட வாதாடியுள்ளார்.
கடந்த 1977-ஆம் ஆண்டில் வழக்குரைஞராக பதிவு செய்த தீபக் மிஸ்ரா, ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு விவகாரம் தொடர்பான வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். இதையடுத்து, ஒடிஸா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 1996-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
பின்னர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றத்திலும், 2010 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். பிறகு, தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், பல்வேறு முக்கிய தீர்ப்புகளை தீபக் மிஸ்ரா அளித்துள்ளார். அந்தத் தீர்ப்புகளில், மும்பைத் தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கும், பாலியல் பலாத்கார வழக்கில் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பும் அடங்கும்.
இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நீதிபதி தீபக் மிஸ்ரா, அந்தப் பதவியை தொடர்ந்து 13 மாதங்கள் வகிப்பார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக மிஸ்ரா பணிபுரியும் காலத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.