ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் 52 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் ஒரு மாதத்தில் 72 குழந்தைகள் வரை இறந்தது தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அதேபோன்ற ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பெற்று வரும் பிற குழந்தைகளின் பெற்றோரும், நோயாளிகளும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஜாம்ஷெட்பூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 1961}ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது 1979}ஆம் ஆண்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. அங்கு இப்போது 540 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கை வசதி உள்ளது.
குழந்தைகளின் இறப்பு குறித்து மருத்துவமனையின் தலைமைக் கண்காணிப்பாளர் கூறுகையில், "இங்கு சிறந்த மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பணியில் உள்ளனர். எனவே, சிகிச்சை அளிப்பதில் எவ்வித குறைபாடும் இல்லை. ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால்தான் குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர்' என்றார்.