ராஜஸ்தான் மாநிலம், மண்டல்கர் தொகுதி பாஜக எம்எல்ஏ கீர்த்தி குமாரி பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 50.
பில்வாரா மாவட்டம், மண்டல்கர் தொகுதி எம்எல்ஏவான கீர்த்தி குமாரி, ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் அவர் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை சூப்பிரண்ட் ஸ்ரீகாந்த் சுவாமி கூறுகையில், "பன்றிக் காய்ச்சல் காரணமாக அவரால் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் இறந்து விட்டார்' என்றார்.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிஜோலி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி குமாரி. ராஜஸ்தான் மாநில அரசில் பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார். கீர்த்தி குமாரியின் மறைவுக்கு முதல்வர் வசுந்தரா ராஜே தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கீர்த்தி குமாரியின் மறைவு, பாஜகவுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு' என்றார். ராஜஸ்தான் மாநில பாஜக நிர்வாகிகள் மத்தியிலும் கீர்த்தி குமாரியின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.