பிரதமரின் வங்கிக் கணக்குத் திட்டம் (ஜன்தன் யோஜனா), சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவை பலரது வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமரின் வங்கிக் கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டதன் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி, மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் வங்கிக் கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டு, திங்கள்கிழமையுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தத் திட்டம், ஏழைகள், சமூகத்தில் பின்தங்கிய மக்கள், விளிம்பு நிலையில் வாழும் மக்கள் ஆகியோரை பொருளாதார சுழற்சியில் கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கமாகும்.
இந்தத் திட்டத்தால், கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். அவர்களை, குறிப்பாக, ஏழைகளுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், இன்னும் கூடுதல் வேகத்துடன் தொடரும்.
வங்கிக் கணக்குத் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், முத்ரா கடனுதவி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள், பலரது வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்துள்ளன என்று அந்த சுட்டுரைப் பதிவுகளில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் தனது வானொலி உரையில் ஞாயிற்றுக்கிழமை பேசும்போது, ""வங்கிக் கணக்குத் திட்டத்தில் புதிதாக 30 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளன. அந்த வங்கிக் கணக்குகளில், ரூ.65,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
மூன்றே ஆண்டுகளில், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதனும் பொருளாதார சுழற்சியில் ஒரு பகுதியாக மாறியிருப்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது'' என்று கூறியிருந்தார்.