ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யும் போது 2 மருத்துவர்கள் மோதலில் ஈடுபட்டதால் குழந்தை இறந்தநிலையில் பிறந்தது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள உமைத் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்கிழமை கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அறுவை சிகிச்சை அறையில் சிகிச்சையில் ஈடுபட்டிருந்த 2 மருத்துவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அறுவைசிகிச்சையின்போது மருத்துவர்கள் மோதலில் ஈடுபட்டதால் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த பெண் சிசு உயிரிழந்தது. சிகிச்சை அறையில் மருத்துவர்கள் மோதலில் ஈடுபட்ட வீடியோ காட்சியை பணியில் இருந்த பணியாளர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவை சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குழந்தையின் இதய துடிப்பு குறைவாக காணப்பட்டதால் உடனடி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்குதான் மருத்துவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அறுவை சிகிச்சை அறையில் மகப்பேறு மருத்துவர் அசோக் நயின்வால், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக பெண் உணவு சாப்பிட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து மற்றொரு மயக்க மருந்து மருத்துவர் எம்.எல். தாக் ஜூனியர் மருத்துவரை பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு அசோக் நயின்வால் உடன்படவில்லை.
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் இருவரிடையேயும் ஹிந்தி மொழியில் வாக்குவாதம் நேரிட்டுள்ளது. இருவரும் ஒருவரது பெயரை ஒருவர் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
அறுவை சிகிச்சை மையத்தில் தெருவில் சண்டையிடுவது போன்று பேசி உள்ளனர். அங்கிருந்த செவிலியரும், மற்றொரு மருத்துவரும் அவர்களை தடுக்க முயற்சி செய்துள்ளனர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் நினைவூட்டும் காட்சிகளும் அந்த வீடியோ பதிவில் காட்டப்படுகிறது. அறுவை சிகிச்சையை மறந்து மோதலில் ஈடுபட்ட மருத்துவர்களால் குழந்தையை உயிருடன் காப்பாற்ற முடியாமல், ஒரு பெண் குழந்தை இறந்தே பிறந்த அவலம் நடந்துள்ளது.
மருத்துவர்களின் அலட்சியத்தால் நடந்த அவலமான சம்பவத்திற்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.