புதுதில்லி: அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதித் தேதி, மார்ச் 31, 2018 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயப்படுதியுள்ளதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் மொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் கவனத்திற்கு மூத்த வழக்கறிஞர் சுரேஷ், ஆதார் அட்டையின் சட்டபூர்வ அங்கீகாரம் தொடர்பான வழக்கு ஒன்றினை கொண்டு வந்தார்.
கர்நாடக மாநில ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி புட்டுசுவாமி என்பவர் சார்பாக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் ஆதார் அட்டை தொடர்பான சட்டம் என்பது அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதே போன்ற வழக்கினை பலரும் தொடர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அப்பொழுது மூன்று நீதிபதிகள் அமர்வானது ஏற்கனவே ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் அரசியல் சட்ட அமர்வானது, ஆதார் சட்டத்தின் அரசியல் சட்டபூர்வ அங்கீகாரம் குறித்த வழக்குகளை விசாரிக்கும் தேதியினை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். பின்னர் அந்த வழக்கானது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுது நீதின்றத்தில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதித் தேதியினை மார்ச் 31, 2018 வரை நீட்டிக்க மத்திய அரசு விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஆனால் உச்ச நீதின்றத்தின் முந்தைய தீர்ப்பு ஒன்றின் காரணமாக வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன் ஆதாரை இணைப்பதற்கான இறுதித் தேதியை நீட்டிப்பதில் மட்டும் சிரமம் உள்ளது என்றும் தெரிவித்தார்.