சட்டமேதை அம்பேத்கரின் 61-ஆவது நினைவு தினத்தை யொட்டி, அவரது உருவப்படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர், கடந்த 1956-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில், அவரது நினைவு தினம் புதன்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரது உருவப்படத்துக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தாவர் சந்த் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
சமூக வலைதளமான சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவருக்கு தலை வணங்குகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அம்பேத்கரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு மரியாதை செய்தார்.
மும்பையில்...: மகாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகரில் உள்ள தாதர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் நினைவகத்தில், ஆயிரக்கணக்கானோர் அவருக்கு புதன்கிழமை மரியாதை செய்தனர்.
அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோரும் நினைவகத்தில் மரியாதை செய்தனர்.