காற்று மாசுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவான செயல் திட்ட அறிக்கையை வியாழக்கிழமை (டிசம்பர் 7) தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தில்லி காற்று மாசு தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தில்லியில் கடுமையான காற்று மாசு நிலவியபோது, தில்லியில் இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டி நடத்தியிருக்கக் கூடாது என்று தெரிவித்தது. மேலும், காற்று மாசுவைத் தடுப்பது தொடர்பாக உறுதியான செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யாத தில்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்த தீர்ப்பாயம், இந்த விவகாரம் தொடர்பாக உறுதியான செயல் திட்ட அறிக்கையை 48 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், தலைநகரில் மாசுவைக் கட்டுப்படுத்த தில்லி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தீர்ப்பாயத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், காற்று மாசு அளவு மிக மோசமான அளவைத் தொடும் போது, கட்டுமானப் பணிகளை முற்றிலும் நிறுத்த வேண்டும். தில்லிக்குள் லாரிகள் வருவதற்குத் தடை விதிக்க வேண்டும். தனியார் வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கக் கூடாது. காற்று மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். குப்பைகளை எரிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
உத்தரவு: அப்போது நீதிபதி ஸ்வந்தர் குமார், "தலைநகர் தில்லியில் காற்றின் தரம் இயல்பாக இருந்ததில்லை. மாசுவை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மாசு அளவைப் பொருத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன? ஆகியவை குறித்து பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான விரிவான செயல் திட்ட அறிக்கையை வியாழக்கிழமைக்குள் (டிசம்பர் 7) தாக்கல் செய்ய வேண்டும். தில்லியில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தனியார் வாகனக் கட்டுப்பாடு திட்டம் குறித்தும் விரிவான அறிக்கையை தில்லி அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தில்லியில் காற்று மாசுவை தடுப்பது தொடர்பாக தில்லி அரசும், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இப்போது மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.