புது தில்லி: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி தனது 1,300 வங்கிக் கிளைகளின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகளை மாற்றியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் இயங்கி வந்த 5 முக்கிய வங்கிகள், எஸ்பிஐயுடன் ஒன்றிணைக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியன் ஃபினான்சியல் சிஸ்டம் கோட் என்று கூறப்படும் ஐஎஃப்எஸ்சி குறியீடு என்பது 11 இலக்கங்களைக் கொண்டது. ஒவ்வொரு வங்கிக் கிளைகளுக்கும் தனித்தனி ஐஎஃப்எஸ்சி குறியீடுகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அளித்துள்ளது. இந்த ஐஎஃப்எஸ்சி குறியீடுளை வைத்தே ஒவ்வொரு வங்கியையும் அடையாளம் காண முடியும்.
ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யவும், பணம் செலுத்தவும் இந்த ஐஎஃப்எஸ்சி குறியீடு அவசியம்.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி தனது 1,300 வங்கிக் கிளைகளின் ஐஎஃப்எஸ்சி குறியீட்டை மாற்றியுள்ளது. இது குறித்து வங்கியின் நிர்வாக மேலாளர் பிரவீன் குப்தா கூறுகையில், வங்கிக் கிளைகளின் ஐஎஃப்எஸ்சி குறியீடு மாற்றப்பட்டது குறித்து அந்தந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், பழைய குறியீட்டுடன், புதிய குறியீடு இணைக்கப்பட்டுள்ளது.
ஐஎஃப்எஸ்சி குறியீடு மாற்றப்பட்ட பிறகும், பழைய ஐஎஃப்எஸ்சி குறியீட்டுக்கு காசோலைகள் வந்தாலும், அவை புதிய ஐஎஃப்எஸ்சி குறியீடு கொண்டிருக்கும் வங்கிக்கு மாற்றப்படும் வகையில் தொழில்நுட்பத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த வாடிக்கையாளருக்கும் பிரச்னை ஏற்படாது.
அதே சமயம், வாடிக்கையாளர்களும், தங்களது வங்கிக் கிளையின் ஐஎஃப்எஸ்சி கோட் பற்றி எஸ்பிஐ இணையதளத்தில் 'பிராஞ்ச் லோகேட்டர்' என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் என்றார்.
பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் கடந்த ஏப்ரல் மாதம் முறைப்படி இணைந்தன.
இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டன.