தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி தமிழ்நாடு அனைத்திந்திய மக்கள் உரிமைப் பாதுகாப்புக் கழகம், தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் எம். சேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வுக்காக மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. அந்த நிபுணர் குழு தமிழகத்தில் 5 இடங்களைத் தேர்வு செய்தது.
இவற்றில், தகுதியின் அடிப்படையில் ஓர் இடம் தேர்வு செய்யப்படும் என நிபுணர் குழு உறுதியளித்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டியை தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் பரிந்துரை செய்தது. அதை பிரதமர் அலுவலகமும் உறுதி செய்தது.
ஆனால், செங்கிப்பட்டியில் மருத்துவமனை அமைப்பதைத் தடுக்கும் வகையில் சில அரசியல் சக்திகள் இயங்கி வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனையை வேறு இடத்தில் கட்டுவதற்கான முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள செங்கிப்பட்டி, அனைத்துப் பகுதி மக்களாலும் இலகுவாக அணுகக் கூடிய தூரத்தில் உள்ளது.
அரசியல் காரணங்களுக்காக ஒட்டுமொத்த தமிழர்களின் நலனை மத்திய அரசு புறக்கணிக்கக் கூடாது. எனவே, தகுதியின் அடிப்படையில் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொது நல வழக்குத் தொடுக்க உள்ளோம் என்றார் அவர்.