மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரின் பிறந்த நாளான செவ்வாய்க்கிழமை (டிச. 12), மாநில பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களின் பிரச்னைகளை மாநில பாஜக அரசு அலட்சியம் செய்வதாகக் குற்றம் சாட்டி வரும் அவர், அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்தப் போராட்டங்களை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.
77-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் சரத் பவாரின் 50 ஆண்டு பொதுவாழ்க்கையில், அவர் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதும் மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆளுங்கட்சிக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தியதாகவும், பெரும்பாலான நேரங்களில் அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவராகத்தான் இருந்தார் எனவும் தேசியவாதக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், மாநில எம்எல்சி-யுமான ஹேமந்த் டகலே கூறியதாவது:
30 ஆண்டுகளுக்குப் பிறகு சரத் பவார் ஒரு ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடுவது உண்மையே. இதற்கு முன்னர், மாநில அரசுக்கு எதிராக அவர் கடந்த 1985-ஆம் ஆண்டுதான் சைக்கிள் ஊர்வலம் நடத்தினார். ஜல்காவ்ன் நகரில் தொடங்கிய அந்தப் பேரணி, நாகபுரியில் நிறைவடைந்தது என்றார் அவர்.
சரத் பவாரின் உறவினரான அஜித் பவார் கூறுகையில், 'பெரும்பாலும் பிறந்த நாள்களின்போது புணே அல்லது மும்பையிலுள்ள தனது இல்லத்தில் ஆடம்பரமில்லாமல் கொண்டாடுவதுதான் சரத் பவாரின் வழக்கம். அவரது பிறந்த நாள்களில் ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள் என எளிமையான நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும். ஆனால், முதல் முறையாக தனது பிறந்த நாளில் மக்களின் நன்மைக்காக பவார் போராட்டம் நடத்தவிருக்கிறார்' என்றார்.