இதயத்தில் பொருத்தக் கூடிய இரண்டு ஸ்டென்ட் சாதனங்கள் உள்பட 849 மருந்துகளுக்கு உச்சபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா, மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
2015-ஆம் ஆண்டைய தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலின் அடிப்படையில் இதயத்தில் பொருத்தக் கூடிய இரண்டு ஸ்டென்ட் சாதனங்கள் உள்பட 849 மருந்துகளுக்கு உச்சபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம், மருந்து விலைக் கட்டுப்பாட்டு உத்தரவில் உள்ள மருந்துகளின் விலைகளை நிர்ணயிக்கிறது.
தற்போது விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 849 மருந்துகளில் 59 மருந்துகளின் அதிகபட்ச விலை 40 சதவீதத்துக்கு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. 24 மருந்துகளின் அதிகபட்ச விலையானது 35 முதல் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. 233 மருந்துகளின் அதிகபட்ச விலை 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.