சிறுமி ஆருஷி கொலை வழக்கில் தல்வார் தம்பதியரை விடுதலை செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அத்தம்பதியின் வீட்டில் பணிபுரிந்த ஹேமராஜின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர்கள் ராஜேஸ் தல்வார் - நூபுர் தல்வார் தம்பதியர். இவர்களது 14 வயது மகள் ஆருஷி கடந்த 2008-ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் தல்வார் தம்பதியின் வீட்டு வேலைக்காரர் ஹேமராஜின் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனினும், ஆருஷி கொலை செய்யப்பட்டதற்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஹேமராஜின் உடல் தல்வார் தம்பதியின் வீட்டு மாடியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை வழக்கில் உத்தரப் பிரதேச போலீஸார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து இவ்வழக்கை அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, சிபிஐ வசம் ஒப்படைத்தார்.
அதன் பின் இவ்வழக்கை சிபிஐ விசாரித்தது. இவ்வழக்கில் காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம், தல்வார் தம்பதியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன்படி ராஜேஷ் தல்வாரும், நூபுர் தல்வாரும் காஜியாபாத் தஸ்னா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.
அத்தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்திருந்தனர். அதை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், தல்வார் தம்பதியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தல்வார் தம்பதி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அவர்களின் வீட்டு வேலைக்காரர் ஹேமராஜின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.