வீரமரணம் அடைந்த ராணுவத்தினரையும், போலீஸாரையும் தியாகிகள் என தாங்கள் குறிப்பிடுவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகமும், பாதுகாப்புத் துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு அந்த அமைச்சகங்கள் பதிலளித்துள்ளன.
சமூக விரோதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், எதிரி நாட்டுப் படையினர் உள்ளிட்டோருக்கு எதிராக சண்டையிடும்போது வீரமரணம் அடையும் பாதுகாப்புப் படையினரைக் கெளரவிக்கும் விதமாக அவர்களைத் தியாகிகள் எனப் போற்றுவதுண்டு. இந்நிலையில், உண்மையாகவே அவர்களுக்கு அத்தகைய அங்கீகாரத்தை மத்திய அரசு அளிக்கிறதா? என்பது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அந்த அமைச்சகங்கள் அளித்த பதில்கள் திருப்திகரமானதாக இல்லை எனத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக மத்திய தகவல் ஆணையத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அமைச்சகங்களுக்கு தகவல் ஆணையம் அறிவுறுத்தியது. அதற்கு பதிலளித்த இரு அமைச்சகங்களும் தங்களது துறையில் தியாகி என்ற வார்த்தைப் பயன்பாடு இல்லை என்று தெரிவித்தன.
மாறாக, போரில் வீரமரணடைந்தவர் அல்லது எதிரிகளுக்கு எதிரான சண்டையில் வீரமரணமடைந்தவர் என்ற சொல்லாடலே பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தன.