ஜம்மு-காஷ்மீரில் பூரண அமைதி திரும்பும் வரை, பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை தொடரும் என்று அந்த மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி. வைத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜம்முவில் அவர் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி இயல்பு நிலைக்கு வேகமாகத் திரும்பி வருகிறது. இதனால் வரும் 2018ஆம் ஆண்டில் அதிக அளவில் பிரச்னைகள் இருக்காது. பயங்கரவாதிகள் முழுவதையும் அழித்தொழிக்கும் "ஆபரேஷன் ஆல் அவுட்' நடவடிக்கையானது, மாநிலத்தில் பூரண அமைதி திரும்பும் வரை தொடரும். காஷ்மீர் பகுதி மக்கள் விரைவில் அமைதியை உணரத் தொடங்குவார்கள்.
நிகழாண்டில் பயங்கரவாதிகள் 200 பேர் கொல்லப்பட்டதன் பெருமை, அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட நமது பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகளையே சேரும். குறிப்பாக, இந்நடவடிக்கையின்போது உயிர்த் தியாகம் செய்தோரை இந்த பெருமைச் சேரும்.
நிகழாண்டைப் போல், அடுத்த ஆண்டு (2018) சவால் நிறைந்ததாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. நிகழாண்டை விட அடுத்த ஆண்டு சிறப்பானதாக இருக்கும்.
ரியாசி மாவட்டம், கட்ரா நகரில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கும் முடிவு குறித்து கேட்கிறீர்கள். இங்குள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் கோடிக்கணக்கான யாத்ரீகர்கள் வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நடக்கும் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் கவலையளிக்கிறது. இந்த அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, காவல்துறைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் எஸ்.பி. வைத்.