உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் அந்த மாநில அமைச்சர் சுரேஷ் ராணா, மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சீவ் பாலியான், பாஜக எம்எல்ஏக்கள் இருவர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்கு அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த வகுப்புவாத மோதல், கலவரமாக வெடித்தது. இதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே, அந்த காலகட்டத்தில் மக்களிடையே வன்முறையைத் தூண்டு வகையில் பேசியதாகவும், கலவரத்துக்கு வித்திட்டதாகவும் மாநிலத்தின் தற்போதைய அமைச்சர் சுரேஷ் ராணா, மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சீவ் பாலியான், பாஜக எம்எல்ஏக்கள் சங்கீத் சோம், உமேஷ் மாலிக் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி மது குப்தா முன்பு வெள்ளிக்ழமை நடைபெற்றது.
அப்போது சாட்சியங்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, சுரேஷ் ராணா, சஞ்சீவ் பாலியான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வரும் ஜனவரி 19-ஆம் தேதி விசாரணைக்கு அவர்களை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.