ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளம், லட்சத் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி எழுதும் முதல் கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வீசிய ஒக்கி புயலால் தமிழகம், கேரளம், லட்சத் தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ராகுல் காந்தி புயலால் பாதிக்கப்பட்ட தமிழக, கேரள மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், மோடிக்கு இது தொடர்பாக அவர் கடிதம் எழுதியுள்ளார்.
வானிலை நிலவரத்தை முன்னதாகவே துல்லியமாகக் கணித்து அறிவிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க உதவும் நவீன தொழில்நுட்பத்தை நமது நாட்டில் மேம்படுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தமிழகம் வந்து பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களைச் சந்திக்க இருக்கிறார்.