பெங்களூரு: மதச்சார்பின்மை பேசுபவர்கள் தங்கள் பெற்றோர்கள் யாரென்றே தெரியாதவர்கள் என்ற மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவின் பேச்சினால் கடும் சர்ச்சை உண்டாகியுள்ளது.
மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ஆனந்த் குமார் ஹெக்டே. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் தொடர்ச்சியாக தனது பேச்சினால் சர்ச்சைகளை உண்டாகி வருபவர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர்,'மதச்சார்பின்மை பேசுபவர்கள் தங்கள் பெற்றோர்கள் யாரென்றே தெரியாதவர்கள்' என்று தெரிவித்தார். அத்துடன் 'மதச்சார்பின்மை' என்ற வார்த்தையினையே இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சு குறித்த தகவல்கள் வெளியாகி தற்பொழுது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இது தொடர்பாக கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. ஆனால் இது தொடர்பாக பாராகிய ஜனதா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
சர்ச்சைகளுக்கு ஆனந்த் குமார் ஹெக்டே ஒன்றும் புதியவர் அல்ல. இவ்வருட துவக்கத்தில் கர்நாடக மாநிலம் சிர்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தனது தாயாருக்கு சிகிச்சை அளிக்க தாமதமானதனைத் தொடர்ந்து, மருத்துவமையின் இரு மருத்துவர்கள் உள்ளிட்டோரை இவர் தாக்கும் விடியோ காட்சி வைரலாகப் பரவியது பின்னர் தான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க சிறிது காலம் தலைமறைவாக இருந்தார்.
அதேபோல கடந்த வருடம் மார்ச் மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது. 'உலகில் இஸ்லாம் என்ற ஒன்று இருக்கும் வரை தீவிரவாதமும் இருக்கும்; எனவே இஸ்லாமை ஒலிக்காத வரை, தீவிரவாதத்தினை ஒழிக்க இயலாது' என்ற தனது பேச்சுக்காக அவர் பின்னர் விளக்கம் கொடுத்து மன்னிப்பு கோரினார். அதேபோல் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது மற்றும் கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிற வழக்குகளும் அவர் மீது பதியப்பட்டுள்ளது.