ஹிமாசலப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. அம்மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்குர் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தோல்விக்கு அக்கட்சியே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையடுத்து ஹிமாசல் முதல்வர் ஜெய்ராம் தாக்குர், செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது குறித்து ராகுல் தெரிவித்தது குறித்து நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனம், மக்கள் காங்கிரஸை புறக்கணித்துவிட்டனர்.
பாஜக-வின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கி உள்ளனர். இதனை ராகுல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாங்கள் இங்கே ஆட்சி அமைத்துள்ளது மாநில வளர்ச்சிக்காவும், மக்களின் முன்னேற்றத்துக்காகவும் மட்டுமே தவிர பழிவாங்க அல்ல.
முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங் மீதான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. அதில், அரசு எதுவும் செய்வதற்கில்லை. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் கட்சி சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அவை அனைத்தும் சீர்செய்யப்படும் என்றார்.