புது தில்லி: பணமதிப்பிழப்பு விவகாரத்தால், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது எந்த வகையிலும் குறையவில்லை.
மாறாக, உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2012ல் பிடிக்கப்பட்ட தொகையை விட சுமார் 3 மடங்கு அதிகமாக அதாவது ரூ.109.79 கோடி அளவுக்கு 2017ல் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 2012ம் ஆண்டை விட 5 மடங்கு அதிகமான தொகை அதாவது ரூ.58.02 கோடி இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது கைப்பற்றப்பட்டது.
அதே போல, உத்தரகண்டில் 2012ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட தொகை ரூ.1.30 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.3.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட தொகை, வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.
தொகையைப் போலவே, இந்த ஆண்டு வருமான வரித்துறையினருக்கு பதிவு செய்ய வேண்டிய வழக்குகளும் அதிகரித்துள்ளது.
இதில் எந்த மாநிலமும் விதிவிலக்கு இல்லை. கோவாவிலும் இந்த ஆண்டு ரூ.2.24 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு ரொக்கப் பண பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, பணமதிப்பிழப்பு விவகாரம், தேர்தலில் பண நடமாட்டத்தைக் குறைக்க தவறிவிட்டதையே காட்டுவதாக தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.