தனியார் வங்கி அதிகாரிக்கு எதிராக முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் மகன் அஜேயா சிங் பதிவு செய்திருந்த முதல் தகவலறிக்கையை (எஃப்ஐஆர்) அலாகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், வழக்கு செலவுகளுக்காக ரூ.10 லட்சம் செலுத்துமாறும் அஜேயா சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹெச்டிஎஃப்சி வங்கியில் துணை பொது மேலாளராகப் பொறுப்பு வகிக்கும் டி.கே. குப்தா என்பவர் மீது அலாகாபாத் கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் அஜேயா சிங் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எஃப்ஐஆர் பதிவு செய்திருந்தார்.
முறைகேடு, போலி கையொப்பம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் டி.கே. குப்தா மீது புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அந்த எஃப்ஐஆரை ரத்து செய்யுமாறு கோரி டி.கே.குப்தா அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அஜேயா சிங் கடந்த 2006-ஆம் ஆண்டு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் அவரது பெயரில் சுமார் ரூ.40 கோடி கடன் பாக்கி இருப்பதாகவும், அதனை வசூல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க விடாமல் தடுப்பதற்காகவே தன் மீது அஜேயா சிங் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் அந்த மனுவில் டி.கே. குப்தா குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் அருண் டாண்டன், உமேஷ் சந்திர ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு, டி.கே குப்தாவின் வேண்டுகோளை ஏற்று, அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆரை தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த வழக்குக்கான செலவுத் தொகையாக ரூ.10 லட்சத்தை அஜேயா சிங் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.