பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டப்பட்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காவரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் அரசியல் செய்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மேகதாட்டுவில் அணை கட்ட எந்த பிரச்னையும் இல்லை. எவ்வித சட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியான தடைகள் இல்லை. மேகதாட்டு அணை திட்டத்தை கர்நாடக எல்லைக்குள் செயல்படுத்தி வருவதால் யாருடைய அனுமதியும் கர்நாடகத்திற்கு தேவைப்படாது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு படி, காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும். வழக்கமான மழை பெய்தால் மட்டுமே அந்த அளவு தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க இயலும்.
பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவே மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஆட்சேபம் தெரிவிக்க தமிழக அரசுக்கு எந்தகாரணமும் இல்லை. குடிநீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
எனவே, மேக்கேதாட்டு அணை திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவோம். இதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என்றார் சித்தராமையா.