லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதிக்கட்சியில் நிலவும் குழப்பத்தின் உச்ச கட்டமாக போட்டி செயற்குழு கூட்டத்தில், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கட்சியின் தேசிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் அறிவித்தார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்கு போட்டியாக அகிலேஷ் 235 பேர் கொண்ட போட்டி தனி பட்டியல் ஒன்றை வெளியிட்டார். இது பிரிவை அதிகமாக்கியது.
இந்நிலையில் கட்சித் தலைவரான முலாயம்சிங் யாதவ் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் கட்சி விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டதால். ஒழுங்கு நடவடிக்கையாக அகிலேஷ் யாதவ் மற்றும் ராம்கோபால் யாதவ் ஆகிய இரண்டு பேரும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள் என்று அறிவித்தார்.
கட்சியில் பெரும் பரப்பரப்பைக் கிளப்பிய இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அகிலேஷ் தனிக்கட்சி தொடங்க ப் போவதாக யூகங்கள் பரவத் தொடங்கின.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் மகன் இடையே சமாதான நடவடிக்கையை மூத்த கட்சித் தலைவரும் அமைச்சருமான ஆஸம்கான் மேற்கொண்டார். முலாயமின் இல்லத்தில் சமாதான நடவடிக்கை பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது.
அதன் முடிவாக முலாயமின் ஆலோசனையின் பேரில் அகிலேஷ் மற்றும் ராம்கோவபால் யாதவ் ஆகிய இருவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் மூத்த தலைவரான ஷிவ்பால் சிங் யாதவ் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று திடீர் திருப்பமாக முலாயம் சிங் யாதவால் நீக்கப்பட்ட ராம்கோபால் யாதவ் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்பு அகிலேஷ் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னர் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முலாயம் சிங் யாதவால் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஷிவ்பால் யாதவ் நீக்கப்பட்டார். மேலும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அமர்சிங்கும் நீக்கப்பட்டார்.
முன்னதாக முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட அறிக்கையில் ராம்கோபால் யாதவ் தலைமையில் நடைபெற உள்ள போட்டிக் கூட்டம் கட்சியின் அரசியலமைப்பிற்கு எதிரானது என அறிவித்து இருந்தார். அதையும் மீறி அகிலேஷ் ஆதரவாளர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று உள்ளது. தற்பொழுது அகிலேஷ் யாதவ் தலைமைப் பொறுப்பிற்கு அறிவிக்கப்பட்டதால் முலாயம் சிங் யாதவ் கட்சித் தலைவராக நீடிக்கிறாரா என்ற குழப்பமும் அதிகரித்து உள்ளது.
முலாயம் சிங் எதிர்ப்பையும் மீறி கூட்டம் நடைபெற்று உள்ளது உபி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்துமே கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் என்பதால் செல்லுமா என்பது இனி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே லக்னோவில் சமாஜ்வாடி தொண்டர்கள் மற்றும் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் இன்று பேசிய அகிலேஷ் யாதவ், 'முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சி மற்றும் உயர்மட்ட தலைமை பொறுப்பை வகிப்பார். முலாயம் சிங் யாதவிற்கு எதிராக சதிதிட்டம் தீட்டினால், அதனை அழிக்கவேண்டியது என்னுடைய பொறுப்பு' என்று பேசிஉள்ளார். இதனால் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.