சண்டிகர்: மகாத்மா காந்தியின் பெயருடன் காதியை சேர்த்த பின்னர்தான் நாட்டில் காதி தொழில் அழியத் துவங்கியது என்று ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கேவிஐசி எனப்படும் தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு வெளியிடப்படும் காலண்டர்களில் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடியின் படம் இடம்பெற்ற விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளைப்பியது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ள கருத்துகள் மேலும் சர்ச்சையை வளர்ப்பதாக அமைந்துள்ளது. அவர் கூறியுள்ளதாவது:
’காந்தியின் பெயருடன் காதியை சேர்த்த பின்னர்தான் நாட்டில் காதி தொழில் தலைதூக்க முடியாமல் அழியத் தொடங்கியது. காந்திக்கு அப்படி ஒரு நல்ல பெயர். கேவிஐசி வெளியிட்டுள்ள காலண்டரில் காந்தியின் படத்துக்கு பதிலாக மோடியின் படம் இடம்பெற்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்.
காந்தி படத்துடன் அச்சடிக்கப்பட்டதால்தான் இந்திய ரூபாய் மதிப்பு இழப்பும் தொடங்கி விட்டது. எனவே ரூபாய் நோட்டுகளில் இருந்தும் காந்தியின் படம் படிப்படியாக நீக்கப்படும்.
காந்தியைவிட மோடியின் பெயருக்குதான் பிரபலமான வர்த்தக அடையாளம் உள்ளது.
இவ்வாறு அனில் விஜ் தெரிவித்துள்ளார். அவரது இந்த் கருத்துக்கள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் அனில் விஜ் வெளியிட்டது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அதற்கும் பா.ஜ.க.வுக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
எனினும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலிட தலைவர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் தேசத் தந்தை மகாத்மா காந்தியை கண்ணியக் குறைவாக பேசிய அனில் விஜ்-க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.