நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து: மத்திய அரசு திட்டம்

நேபாளம், வங்கதேசம், பூடான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

நேபாளம், வங்கதேசம், பூடான், மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங்கில் இந்திய ரயில்வே துறைக்கும், யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேபாளம், வங்கேதசம், பூடான், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடன் இந்திய அரசு நல்லுறவைக் கொண்டுள்ளது. ரயில் போக்குவரத்து மூலமாக, அந்த நாடுகளுடன் தொடர்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அதற்கான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
அண்டை நாடுகளுடன் ரயில் போக்குவரத்து மூலம் தொடர்புகள் உருவாக்கப்பட்டால், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவை அதிகரிக்கும்.
வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக, 8 மாநிலத் தலைநகரங்களை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
மாநிலத் தலைநகரங்கள் இணைக்கப்பட்ட பிறகு, இந்தப் பிராந்தியங்களின் முக்கியத் தொழிலான தோட்டக் கலை, பூ விற்பனை, கைவினைப் பொருள்கள் ஆகியவற்றின் சந்தை பெரிய அளவில் வளர்ச்சியடையும். ரயில்வே துறையில் ரூ.3-3.5 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்படும். அதன் காரணமாக, ரயில் போக்குவரத்து மேலும் மேம்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com