புது தில்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்கள் அனைவருக்கும் கட்சிக்கு அப்பால் ஒன்று சேர்ந்திருப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு கோரி, அதிமுக எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசரச் சட்டம் இன்று கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண உதவுமாறும் கேட்டுக் கொண்டதாக கூறினார்.
மேலும் பேசுகையில், நாம் ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்காக அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும். இல்லை என்றால், நம் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். அதனால்தான் இன்று அதிமுக ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். திமுக ஆட்சி காலத்தில் அதனை செய்யாமல், இன்று போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்கத் தக்கது அல்ல என்று கூறினார்.