ஒரு மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டை எப்படிக் காப்பது என்பதை மகாராஷ்டிர அரசு தமிழகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சிவசேனை எம்.பி. சிவாஜிராவ் அதல்ராவ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புணேயில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
தமிழகத்தைப் பாருங்கள். அந்த மாநில அரசு ஜல்லிக்கட்டுக்காகப் போராடுபவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறது.
அந்த மாநிலத்தின் முதல்வர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டி, பிரதமரை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த உணர்வைப் பின்பற்றி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸýம் பிரதமரை நேரில் சந்தித்து, மாட்டு வண்டிப் பந்தயத்துக்கான தடையை நீக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மகாராஷ்டிரத்தின் பாரம்பரிய விளையாட்டான மாட்டு வண்டிப் பந்தயத்தை நடத்த வலியுறுத்தி, கட்சி பேதமின்றி ஏராளமானோர் சக்கனில் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.
மாட்டு வண்டிப் பந்தயம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வழக்கு முடிவடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அதற்குள் அந்தப் பந்தயத்துக்கான தடையை நீக்க மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்
சிவாஜிராவ்.
தமிழக அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்கு
தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவிருப்பதாக புணேயைச் சேர்ந்த விலங்கு நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சர்வ ஜீவ மங்கல பிரதிஷ்டான் மற்றும் "பீப்பிள்
ஃபார் அனிமல்ஸ்' அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொதுமக்களின் நிர்பந்தத்துக்குப் பணிந்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம், நீதிபரிபாலன முறையைக் கேலி செய்வதுபோல் அமைந்துள்ளது.
மிருகவதைத் தடுப்புச் சட்டம் என்பது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தம் செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை.
எனவே, ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.