அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 5 நூற்றாண்டுகளாக முழுக்க முழுக்க பணப் பரிவர்த்தனையே இல்லாத குக்கிராமம் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால் அனைவரும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதனை ஏற்று தற்போது பலர் இணையம் மூலம் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர் என்றால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியமாகிறது.
ஆனால் எவ்வித தொழில்நுட்பமும் இன்றி அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியிலிருந்து 32 கி.மீ. தூரத்தில் உள்ள சிறிய குக்கிராமத்தில் கடந்த 500 ஆண்டுகளாக பணப் பரிவர்த்தனையே இல்லையெனில் அவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்கின்றனர்?
ஆம். அந்த கிராமத்தில் பாபிலோனியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பண்டமாற்று முறை இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
மத்திய அஸ்ஸாம் மற்றும் மேகாலயத்தைச் சேர்ந்த திவாஸ் என்ற பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் ஜனவரி 3-ஆவது வாரத்தில் வர்த்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றனர்.
அதன்படி மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் மூன்று நாள் கண்காட்சி தொடங்கியது.
பிறை வடிவிலான மிகப் பெரிய இயற்கை நீர் நிலையின் பின்புறம் நிகழ்ந்த கண்காட்சியின் நிறைவு விழாவில் மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இன்றைய நவீன யுகத்தில் பணமில்லா பரிவர்த்தனையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இந்தப் பழங்குடியின மக்களிடம் கற்று கொள்ள வேண்டும்.
இந்தக் கண்காட்சி வருங்காலத்திலும் தொடர நிரந்தர இடம் ஒதுக்கித் தரப்படும். இதனால் உள்ளூர் மக்கள் பலனடையும் வகையில் சுற்றுலாத் துறை ஊக்குவிக்கப்படும் என்றார் அவர்.
கண்காட்சியில் இஞ்சி, மூங்கில், மஞ்சள், பூசணி, மருத்துவ மூலிகைகள், கருவாடு உள்ளிட்டவை பெரும்பாலும் பண்டமாற்றம் செய்யப்பட்டன.