ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து வழக்கு: விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆலோசனை

ஜல்லிக்கட்டுக்கு வகை செய்யும் தமிழக அரசின் புதிய சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது குறித்து தில்லியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் திங்கள்கிழமை தீவிரமாக ஆலோசனை

ஜல்லிக்கட்டுக்கு வகை செய்யும் தமிழக அரசின் புதிய சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது குறித்து தில்லியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் திங்கள்கிழமை தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.
இது தொடர்பாக தில்லியில் இந்திய விலங்குகள் நல வாரிய முன்னாள் உறுப்பினர் நந்திதா கிருஷ்ணன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் (ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் விலங்குகளை கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் ஆஜராகி வாதாடியவர்) மற்றும் பிராணிகள் நல அமைப்பான "பீட்டா' உள்ளிட்ட அமைப்புகள் தனித்தனியாக தில்லியில் திங்கள்கிழமை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தின.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு கடந்த சனிக்கிழமை (ஜனவரி 21) அவசர கொண்டு வந்த நிலையில் அதை திங்கள்கிழமை (ஜனவரி 23) கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடருவதா அல்லது சட்டப்பேரவையில் தாக்கலாகி சட்ட மசோதா நிறைவேறியதும் வழக்கு தொடருவதா என்று சமூக ஆர்வலர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு வகை செய்யும் அவசர சட்டத்தை முறைப்படுத்தும் சட்ட மசோதா, மாநில சட்டப்பேரவையில் திங்கள்கிழமை மாலையில் கூடி நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அச்சட்ட மசோதாவில் உள்ள அம்சங்கள், உள்பிரிவுகள் உள்ளிட்டவற்றின் விவரம் தில்லியில் உள்ளவர்களுக்குக் கிடைத்தது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடுத்த மனுதாரரான "பீட்டா' அமைப்பு ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.
இத்தகவலை அந்த அமைப்பின் நிர்வாகி ஷாம்பவி தெரிவித்தார்.
மேனகா காந்தி மனு தாக்கலா? நிர்மலா சீதாராமன் மறுப்பு
தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தை எதிர்த்து மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சரும் விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை என்று மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சில ஊடகங்களில் திங்கள்கிழமை ஒளிபரப்பான செய்திகளை நிர்மலா சீதாராமன் மறுத்தார். மேலும் அவர் தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: சில ஊடகங்களில் ஒளிபரப்பான செய்திகளை பார்த்த பிறகு, மேனகா காந்தியை தொடர்பு கொண்டு பேசினேன். அந்த செய்திகள் அடிப்படையற்றது. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்று மேனகா காந்தி தெரிவித்தார் என்று அதில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com