மின்னணு பணப் பரிமாற்றத்தை ஒழுங்குமுறைப்படுத்த தனி அமைப்பை ஏற்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
அதே நேரத்தில், இப்போது மின்னணு பணப் பரிமாற்றத்தை கையாண்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இதனை விரும்பவில்லை என்று தெரிகிறது.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அடுத்து மின்னணு முறை பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையடுத்து டெபிட், கிரெடிட் கார்டுகள், இ-வாலட், வங்கிக் கணக்கில் இருந்து மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்வது போன்றவை பெருமளவில் அதிகரித்தன.
இந்நிலையில், மின்னணுப் பணப் பரிமாற்றம் குறித்து பரிந்துரைகளை அளிக்க மத்திய அரசு நியமித்த ரத்தன் வாட்டாள் குழு, நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்த மாதம் தனது அறிக்கை அளித்தது. அதில், மின்னணு பணப் பரிமாற்றத்தை ஒழுங்குமுறைப்படுத்த தனி அமைப்பை ஏற்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில் மின்னணுப் பணப் பரிமாற்றத்துக்கான கட்டணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.