மற்ற அனைத்து மதுபானங்களையும் விட, குறைந்த ஆல்கஹால் கொண்ட பீர் உடல் நலத்துக்கு நல்லது என்று ஆந்திர அமைச்சர் கொத்தபலி சாமுவேல் ஜவகர் கூறியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் கடவுள் பெயரில் இயங்கும் மதுபானக் கடைகளுக்குத் தடை விதிக்கவும் ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்துப் பேசிய அமைச்சர் ஜவகர், மற்ற ஏனைய மதுபானங்களையும் விட, பீர் தான் உடல் நலத்துக்கு நல்லது. ஏன் எனில், அதில் குறைந்த அளவே ஆல்கஹால் உள்ளது. எனவே, மாநில அரசு, மற்ற மதுபானங்களை விட, பீர் மதுபான விற்பனையை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது என்றார்.
மேலும் இதற்கு விளக்கம் அளித்த ஜவகர், பீர் உடல் நலத்துக்கு நல்லது என்று நான் சொல்லவரவில்லை. மாறாக, மற்ற மதுபானங்களோடு ஒப்பிடும் போது குறைந்த ஆல்கஹால் இருப்பதால் பீர் நல்லது என்றுதான் சொல்கிறேன். ஏற்கனவே, விற்பனையில் இருக்கும் பல பெரிய நிறுவனங்களின் பீர்களை விட, குறைந்த ஆல்கஹால் இருக்கும் உள்ளூரில் உற்பத்தியாகும் பீர் மதுபானம் அறிமுகம் செய்யப்படும். குடிக்கும் மக்களின் பழக்கத்தை மாற்ற முடியாது. எனவே, அவர்களை குறைந்த ஆல்கஹால் இருக்கும் மதுபானத்தைக் குடிக்க வைக்க முடியும் என்பதற்காகவே இந்த திட்டம் என்று அவர் கூறினார்.