புது தில்லி: போலி சாதிச் சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தால் பணி அல்லது பட்டத்தை உடனடியாகப் பறிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்திருந்தாலோ அல்லது இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றிருந்தாலோ உடனடியாக அது சட்டப்படி குற்றம். அவர்களது பணி அல்லது பட்டத்தை உடனடியாகப் பறிக்கலாம். அரசு ஊழியராக இருந்தால் அவர்கள் எத்தனை காலம் பணியில் இருந்தாலும் அது பற்றி கருத்தில் கொள்ளாமல் உடனடியாக பணியில் இருந்து நீக்கி, அவர்களுக்கு உரிய தண்டனையும் கொடுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மகராஷ்டிர மாநில அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மீதும், இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரிகளில் இடம்பிடித்தவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்திருந்தது.
இதனை எதிர்த்து சிலர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட சில உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், இந்த விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு, அகில இந்தியா முழுவதும் செல்லுபடியாகக் கூடியதாகத்தான் பார்க்க முடிகிறது.