புதுதில்லி: ஆதார் தொடர்பான வழக்குகளுக்கு என தனியாக அரசியல் சாசன அமர்வு ஒன்றை உருவாக்க கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகுமாறு, உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை பெற வேண்டியது கட்டாயம் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் பொது மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி, அதனை எதிர்த்து மூன்று பேர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மூன்று வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரித்த உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு ஒன்று, கடந்த ஜூன் 27-ல் இது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதனையும் பிறப்பிக்க மறுத்ததுடன், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற மத்திய அரசன் வாதத்தினையும் ஏற்றுக் கொண்டது.
முன்னதாக மத்திய அரசின் வேண்டுகோளினை ஏற்று கேஸ் சிலிண்டர் மானியம், ஐன் தன் வங்கி கணக்குகள் மற்றும் பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றுக்கு ஆதார் அட்டையினை இணைக்கும் திட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் செல்லமேஸ்வர், கன்வில்கர் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மத்திய அரசின் சார்பாக தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும், மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவானும் ஆஜராகினர்.
அப்பொழுது அவர்களிடம் ஆதார் தொடர்பான வழக்குகளுக்கு என தனியாக அரசியல் சாசன அமர்வு ஒன்றை உருவாக்க கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகுமாறு, உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாகவே இது தொடர்பான பிரச்சினைங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் அறிவுறுத்தினார்
அதனை ஏற்றுக் கொண்ட தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் இது தொடர்பாக தலைமை நீதிபதியிடம்முறையிடுவதாக தெரிவித்தார்