சென்னை சைதாப்பேட்டையில் மாநில அரசு நடத்தி வரும் நாய்கள் இனப்பெருக்க மையத்தை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடர்பாக பீட்டா, விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் நாய்கள் இனப்பெருக்க மையம் உள்ளது. இங்கு நாட்டு நாய்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட ரகங்களைப் பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு போதுமான வசதிகள் இல்லை. இது தொற்றுநோய் பரவக் காரணமாக உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி அதை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று பிராணிகள் நல அமைப்பான பீட்டா சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013- ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி இம்மையத்தை இந்திய விலங்குகள் நல வாரியம் ஆய்வு செய்தது. 'நாய்களைப் பராமரித்துப் பாதுகாக்க வாரியம் வகுத்துள்ள விதிகள் சரிவர பின்பற்றப்படவில்லை. எனவே, நாய்களுக்கு தோல் நோய் பரவ வாய்ப்புள்ளதால் மையத்தை மூட வேண்டும்' என்று கடந்த 2015- ஆம் ஆண்டு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் பரிந்துரைத்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் 14- ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விதிகளை நாய்கள் இனப் பெருக்க மையம் கடைப்பிடிக்கவில்லை.
எனவே, இரண்டு மாதங்களுக்குள் மையத்தை மூட வேண்டும்' என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ. எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,
நாய்கள் இனப்பெருக்க மையத்தை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஏற்கெனவே விதித்த தடை நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக விலங்குகள் நலவாரியம் பதில் அளிக்க நோட்டீஸ் அளிக்கப்படுகிறது என்றனர்.