ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியின் நினைவு தினத்தை யொட்டி (ஜூலை 8) பாதுகாப்பு காரணம் கருதி, ஜம்மு முகாமிலிருந்து அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
பயங்கரவாதி பர்ஹான் வானியை கடந்த ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி பாதுகாப்புப் படை வீரர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
அதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இளைஞர்களும், பிரிவினைவாதிகளும் 50 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பல்வேறு நாள்கள் தொடர்ந்து வன்முறை நீடித்து வந்தது. எனினும், பாதுகாப்புப் படையினரின் தீவிர முயற்சியின் காரணமாக போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பள்ளத்தாக்குப் பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.
இந்தச் சூழலில் பர்ஹான் வானியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க வருமாறு பிரிவினைவாதிகள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதைக் கருத்தில் கொண்டு காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு உள்ளிட்ட காரணம் கருதி ஜம்மு முகாமிலிருந்து அமர்நாத் யாத்திரை மேற்கொள்வதும் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் புனித யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இதுவரை 1,94,771 லட்சம் யாத்ரீகர்கள் அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்பியுள்ளதாகவும், நேற்று 12-வது குழுவில் 4,411 யாத்ரீகர்கள் 170 வாகனங்களில் பகவதி நகரில் இருந்து தரிசனத்திற்கு புறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.